இனவாதம் அழிவு வாதமே!
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.
கேள்விக்குட்படுத்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.
அமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் பண்புகளில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடித்தளமான அகபுறக்காரணிகளை தீர்ப்பதற்கு மாற்றாக, மேலும் இந்த விடயங்களில் புதிய அரசியலமைப்பானது சிங்கள தேசியவாத சிந்தனைகளை அரசின் கொள்கையாக முன்னிலைப்படுத்தும் என்பதை துணிந்து எதிர்வு கூறமுடியும். (more…)
பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
- [‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]
நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
உரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். (more…)
வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக் குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்து டன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா?
நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளதுதான். என்னுடைய அரசியல் இலக்கிய நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் காலத்திற் குக் காலம் மாறி வந்தவைதான். ஆனால் நான் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அந்த நிலைப் பாட்டை முழுமையாக நம்பும்போது அந்த அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டிற்காக ஓயாமல் போரிடுவதுதான் நேர்மையான செயல் என்று நான் கருதுகிறேன். இதில் அலுப்பென்றும் சலிப்பென்றும் எதுவுமில்லை.
சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பது போலவே இலக்கியத்தளமும் வர்க்கங்களாலும் சாதியாலும் பால்நிலையாலும் மேல் கீழாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாஸிசத்தின் அடிவருடிகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதியப் பற்றாளர்களும் குறுந் தேசியவாதிகளும் இலக்கியத் தளத்தினுள் தீவிரமாக இயங்கும்போது நாம் அவர்களைத் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தேயாக வேண்டும். இதிலென்ன சலிப்புள்ளது. உண்மையில் இதுவொரு உற்சாகமான வேலை.
தவிரவும் இலக்கியத்தளத்திலோ அரசியல் வெளிகளிலோ நான் வரித்துள்ள கருத்துகள் மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்துகளாகவே இருக்கும் போது எனக்கு இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகமிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களிலும் நான் ஒருவனே ட்ரொஸ்கியவாதி. நான் புலம்பெயர் சிறுபத்திரிகை களில் எழுதத் தொடங்கிய காலத்தில் ட்ரொஸ்கியம் சார்ந்தே எனது கருத்துப் போர்கள் நிகழ்ந்தன. அம்மா மற்றும் எக்ஸில் இதழ்களைத் தளமாகக்கொண்டு நாங்கள் மிகச் சிலர் தலித்தியம், பின்நவீனத்தும், விளிம்புநிலை அரசியல் குறித்த உரையாடல்களை, விவாதங்களைப் புகலிடத்தில் ஆரம்பித்தபோதும் சுற்றி நின்ற கொடும்பகையை எதிர்கொள்ள ஓயாமல் கருத்துப்போர் நடத்த வேண்டியிருந்தது. (more…)