Archive for July, 2009
முத்தமிடக் காத்திருந்த நாள்
எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009
01
உன்னை முத்தமிடக் காத்திருந்த
நாளில்
என் கடைசிக் கவிதை
கொலை செய்யப்பட்டிருந்தது.
விஷர் பிடித்த
மோட்டார் சைக்கிள்
விழுங்கிய நகரத்தில்
எனது முகம்
தனியே தொங்குகிறது.
ஆட்களில்லாதவர்களின்
வார்த்தைகளை கொலுவிய
புத்தகக் கடையில்
புத்தகங்கய்டையில்
சொருகப்பட்டிருந்தது
ஒரு துப்பாக்கி.
ஆமணக்கம் விதைகளை
தின்று மயங்கிய
குழந்தைகள் திரும்பி
அழும் சத்தத்திற்கு அருகில்
கிடந்தன சவப்பெட்டிகள்.
உன் முத்தத்திற்கும்
என் கவிதைக்கும் இடையில்
ஒரு நூல் வளருகிறது.
அந்த நூலை அறுக்கிறது
என்னை அவர்களின்
குருதிச் சொற்களால்
எழுதிய சுவர்களிலிருந்து
திரும்புகிற துப்பாக்கி.
என் கடைசிக் கவிதையை
எழுதிய தாள்களினை மூடுகிறது
ஒரு இராணுவத் தொப்பி.
2
நான் உன் முத்தத்திற்காகவும்
பேனாக்களை எடுத்துச் செல்கிறேன்.
நாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்
சோறுசமைத்துக்
கொண்டிருந்த பொழுது
படலை துண்டு துண்டாய்
சிதைந்து போனதை நீ கண்டாய்.
சிதைந்த நகரத்தில்
திறந்திருக்கும் தேனீர்க்கடைக்கு
உன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை
நான் இன்னும்
உன்னை முத்தமிட வேண்டும்
குழந்தைகள்
அழைத்து வரப்பட்ட நகரத்தில்.
மிகவும் பிரியத்துடன்
முத்தமிடக் காத்திருந்த நாளில்
குருதி கசிந்த கைகளினால் எழுதிய
கடைசிக் கவிதையினோடு
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்.
உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.
பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் தனிவரைவா? இனவரைவா?
எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009
கருத்துவைப்பு முறையாகவே இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகின்ற போதிலும் மேற்படி எஸ்.எல்.எம். ஹனிபாவின் பட்டியலின் தொடக்கமாக வ.இ.இராசரத்தினத்தின் ‘கொழு கொம்பு’ வையும், சண்முகம் சிவலிங்கத்தின் ‘நாலாண்டுகளை’யும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் திடமான கருத்தாகும்.
மேற்படி பட்டியலில் சொல்லப்பட்ட புனை பிரதிகளை நுணுக்கமாக வாசிப்புச் செய்யும் வாசகன் ஒருவன், பலவிதமான இலக்கிய அனுபவங்களையும், கலாசாரத் தன்மைகளையும் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம். கடலும் கடல் சார்ந்த களப்பும் நதியும் நதி சார்ந்த களிமுகமுமான ஒரு நீர்க்கரை நாகரீகத்தை அணுக்கமாகக் கெண்ட ஒரு மக்கள் கூட்ட மொன்று இயற்கையைக் கையகப்படுத்தி, அதனை மாற்றியமைத்து, அபிவிருத்தி செய்து ஆதிபத்தியம் செய்து கொண்ட ஒரு நிலஉருவாக்கத்தினை இப்புனைவுகளிலிருந்து கண்டு கொள்ளலாம். சிறப்பாகக் கிழக்கிலங்கையினை நிலக் குறியாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பல நூற்றாண்டுகால வாழ்க்கை வரலாற்றினை இப்புனைவுகளில் தோண்டி எடுக்கலாம். கிழக்கிலங்கையின் நிலக் குறிக்குள் வேறுபடும் வெவ்வேறு புனைகளங்களை தரிசித்தனுபவிக்கலாம். (more…)
கனவைப் பெய்த மழை
எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009
இன்றிரவு
திடீரென பெய்த மழையில்
நனைந்து போனது பேருறக்கத்தின் ஒரு பகுதி
இரண்டாய் பிளந்து கிடந்த அவ்வுறக்கத்தின் தேவைகளை
கையில் எடுத்துக் கொண்டு
இந்த நள்ளிரவில் எங்கே ஒதுங்குவது?
கடலென பெய்யும் கனவுகளைத் தடுக்க
வழியேதுமற்ற சிறு குடையுடன்
பூனை முழி முழித்த என்னுடலின் ஒரு பாதி
கரைந்து போக மீதி உடலை நந்தனுக்குப் பங்கு வைத்து
விரும்பியபடி கனவுகளை மீட்டெடுக்க
இரவுகளை அளைந்தபடி இருந்தேன்
கனவுகளாய் சரி பாதியாய் உடைந்து கிடக்கும்
பகல்களையும் இரவுகளையும் (சிறு சிறு கூறுகளாய்)
உண்டு முடித்தேன்.
எலி அளைந்த தேங்காய்ப் பாதியைப் போல
பிளந்து கிடந்த உறக்கத்தை
சரிபாதியாய் பகிர்ந்து கொள்ளும் (முயற்சியில்)
அறைக்குள்ளும் வெளியிலும் குறுக்கும் (மறுக்குமாய்)
அலைந்து திரிந்தன
இரு வேறு கறுப்பு வெள்ளைப் பூனைகள்
பெருமழை ஓய்ந்து கிழக்கே
வானம் வெளித்த போதும் இழந்து போன தூக்கத்தை
(மீளப்பெற முடியவில்லை)
மீட்டுத் தருவது யார்?
பூனையா?
கனவா?
மழையா?
எது?
இடியும் மின்னலுமற்ற சூட்சும வெளியில்
கனவை பெரு மழையாய் இறக்கியவள்
இவை ஏதுமற்ற நீர்ச்சலனத்துடன் இன்னொரு
பகலை திறந்து அதன்வழி வெளியேறுகிறாள்!