Posts filed under ‘கருத்துரை’
சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப் பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒரு வகையில் அபத்தமானதுதான்.
சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்ட காலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டு கொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மை யும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு தளத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ். போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத் திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம் பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுத முடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்து கொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம்.
(more…)


