Posts filed under ‘கட்டுரை’
ஒகோனி மக்களின் போராட்டம் – சொகரி எகின்னே
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

நைகர் ஆற்றின் மற்றைய கழிமுகப் பிரதேசங் களைப் போல, 1958ல் ஒகோனிகளின் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அந்த நிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அந்த மக்களின் துயரத்தில் கென்சரோ விவாவின் குறுக்கீடு முக்கியமானதாகும். அது அவர்களின் போராட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது. இப்போராட்டத்தில் ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப் பட்டனர்.
நதிப் பிரதே அரசின் தலைநகர் போட் வராகெட்டிலிருந்து வடக்குப் பக்கமாக உள்ள 400 சதுர மைலில் பரந்து கிடக்கும் 200 கிராமங்களில் கிட்டத்தட்ட 5,00,000 ஒகோனி மக்கள் வாழ்கிறார்கள். கழிமுகத்தின் மற்றைய பிரதேசங்களைப் போல ஒகோனிகளின் நிலத்திலும் நூற்றுக்கணக்கான குழாய்கள் குடிமனைகளுக்கூடாகவும் விவசாய நிலங்களுக்கூடாகவும் மசகு எண்ணெய்யை கொண்டு செல்கின்றன. அவைகளிலிருந்து வெடித்தெழும் தீச்சுவாலைகளால் கரும் தூசும் கக்கும் சூழலை மாசுபடுத்துகின்றன. கடந்த 40 வருடங்களாக நாள் தவறாமல் இந்நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை எண்ணெய் கம்பெனிகளின் கவனக்குறைவாலும் பராமரிப்பு குறைவாலும் நிகழ்கின்றன. சூழல் துஷ்பிரயோகம் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பாராமுகம், சரியான வளப்பங்கீடு இன்மை, விவசாய நிலங்களின் சேதத்துக்கு இழப்பீடு இன்மை போன்றவையே நைகர் கழிமுகப் பிரதேசங்களில் நடைபெறும் போராட்டத்துக்கு காரணங்களாகும். (more…)
அகதிகள் பலவிதம் – கலையரசன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய ஆவணங்கள், இலக்கியங்கள், தமிழில் வேண்டிய அளவு இருக்கின்றன. ஐரோப்பாவில் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஈழத்தமிழர் மட்டும் புலம் பெயரவில்லை. கொழும்பு தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இவர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டை சேர்ந்த இந்தியத் தமிழரும் புலம்பெயர்ந்துள்ளனர்! இதைவிட “இனப்பிரச்சினையில் மேலாதிக்கம் பெற்ற” சிங்கள இனத்தை சேர்ந்த அகதிகள் குறித்தும் பேசப்படுவதில்லை. எமது தமிழ் இலக்கியங்கள் புறக்கணித்த சமூகங்களைப் பற்றி இந்தப் பாகம் விவரிக்கின்றது.
முதலில் கொழும்பு அல்லது மலையகத் தமிழ் அகதிகள். ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினரே அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். அதிலும் கொழும்பை சேர்ந்த (வட-கிழக்கு பூர்வீகமற்ற) தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம். மலையகப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஒன்றில் வசதியற்றவர்கள், அல்லது ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் நடைமுறை அறியாதவர்கள். அதற்கு மாறாக உலகமயமாக்கப் பட்ட கொழும்பில் வாழ்பவர்கள் எப்படி வெளிநாடு செல்லலாம் என்ற வழிவகை தெரிந்தவர்கள். என்னோடு அகதி முகாமில் சில கொழும்புத் தமிழர்களும் தங்கியிருந்தனர். அவர்கள் இராணுவ ஒடுக்குமுறையை ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருந்தனர். கொழும்பு மாநகரில் இடம்பெறும் தேடுதல் வேட்டைகளின் போதும் இவர்கள் தொந்தரவுக்கு உள்ளாவதில்லை. ஈழப்போர் தீவிரமடைந்த பிற்காலத்தில் இந்த நிலமை மாறியது. சில கொழும்புத் தமிழரும் புலி உறுப்பினர்களுக்கு மறைவிடம் வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டதால், பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
(more…)
வன்னிச் சனங்களின் நிலைமை மறைக்கப்படும் துயரமும் வியாபாரமாக்கப்படும் அவலமும் – கரன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1990களில் ஐரோப்பியப் பயணங்களை மேற்கொண்டிருந்த சுந்தர ராமசாமி ‘தாழ்ந்து பறக்கும் தமிழ்க் கொடி’ என்றொரு கட்டுரையை ‘சுபமங்களா’வில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை அநேகமாக தமிழ்ச் சூழலின் நிலைமையை விவாதித்திருந்தது. அப்போது சுபமங்களா ஈழத்திலும் கொஞ்சம் செல்வாக்குச் செலுத்தியிருந்தபடியால் சுந்தர ராமசாமியின் அந்தக் கட்டுரை அங்கும் விவாதத்துக் குள்ளாகியது. ஏனெனில் ‘தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி’ என்றால் தமிழ் அபிமானிகளுக்கு கோபம் வராதா என்ன? அவர்கள் ஈழத்திலிருந்தால் என்ன? இந்தியாவில் இருந்தாலென்ன லண்டனி லிருந்தாலென்ன? தமிழுக்கு ஒன்றென்றால் அவர்களால் சும்மா இருக்க முடியுமா? சுந்தர ராமசாமி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவ்வளவுக்கும் அவர் தமிழ்ச் சூழலின் நிலைமை பற்றிக் கவலை கொண்டே அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.
தமிழ்ச் சூழலின் நிலைமையை இந்தமாதிரி வெங்கட் சாமிநாதன் ஒரு காலம் எழுதினார். அவரும் தாராளமாக திட்டித் தீர்க்கப்பட்டார். அவருடைய கோட்பாடுபற்றி நான் இங்கே விவாதிக்க வரவில்லை. ஆனால் வெங்கட் சாமிநாதன் முன்வைத்த கருத்துகள் பலவும் மறுக்க முடியாத உண்மைகள். சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ கூட தமிழ்ச் சூழலை விமர்சிக்கும் ஒரு காலாசார எதிர்வினை நாவல்தான். அதனால் அந்த நாவல் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியது.
(more…)


